குடும்ப தகராறால் ஒருவர் பலி: 6 பேர் கைது
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் கடந்த (14) ஆம் திகதி பொங்கல் தினத்தில் இடம்பெற்ற ராமர் பஜனை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சிறு வாய்த்தர்க்கம் முற்றியதில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதேபகுதியைச் சேர்ந்த 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளhர்
பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் குடும்ப தகராறே கொலையில் முடிவடைந்துள்ளதாகவும், சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட 6 பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் (29)ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.