நிதி அட்டையைக் கொள்ளையடித்து பொருட்களை கொள்வனவு செய்த நபர் கைது
க.கிஷாந்தன்
பிரிட்டிஷ் பெண்ணொருவரின் நிதி அட்டையைக் கொள்ளையடித்து. ஹட்டன் நகரிலுள்ள சில வர்த்தக நிலையங்களில் இரண்டரை இலட்சம் ரூபா
பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ள சந்தேக நபர் ஹட்டன் பொலிஸாரால் நேற்றிரவு (19) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற ரயிலில் பயணித்த பிரிட்டிஷ் பெண்ணின் நிதி அட்டையை, ஹட்டன் மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து கொள்ளையடித்து ஹட்டன் நகரில் தங்க நகை, தொலைபேசி, ஆடை உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளார்.

பின்னர் தங்க நகையை ஹட்டனிலுள்ள தனியார் அடகு பிடிக்கும் நிலையமொன்றில் அடகு வைத்து 78 ஆயிரம் ரூபா பெற்றுள்ளார்.

தனது நிதி அட்டை களவாடப்பட்டுள்ளமை தொடர்பில் எல்ல சுற்றுலாப் பொலிஸாரிடம் குறித்த பெண் முறையிட்டுள்ளார். இதனையடுத்து அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து விசாரணை தொடர்ந்த பொலிஸார், வாடகை வாகனமொன்றில் எல்ல நோக்கி பயணமாக தயாராகிக்கொண்டிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். களவாடிய நிதி அட்டையில் இருந்து வாங்கிய பொருட்களையும் மீட்டனர்.
பிரிட்டிஷ் பெண்ணை ஹட்டன் வரவழைத்துஇ நிதி அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தனர். குறித்த நபர் கடைகளில் வாங்கிய பொருட்கள் மீள
வழங்கப்பட்டு அதற்குரிய பணமும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
