முச்சக்கர வண்டி விபத்தில் இருவர் படுகாயம்
ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், சாரதியும் பயணி ஒருவரும் படுகாயமடைந்தனர்.

இன்று (27) அதிகாலை, ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் முதலில் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளை மேற்கொண்ட வட்டவளை பொலிஸ் அதிகாரிகள், அதிகவேகத்தில் முச்சக்கரவண்டியை ஓட்டியதால், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் விழுந்ததாக தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டி பெரும் சேதமடைந்துள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.