இ.போ.ச பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பேருந்து ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பலவந்தமாக பேருந்தில் இருந்து வெளியேறுமாறு பணித்த சம்பவம் ஒன்று நேற்று (06) காலை இடம் பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட கினிகத்தனை கடவளை விக்னேஸ்வரா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களான இவர்களைப் பேருந்து நடத்துனர் பேருந்தில் இருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு என்று இலங்கை போக்குவரத்து சபையின் ஊடாக வழங்கப்படும் பருவச் சீட்டை, பேருந்து நடத்துனரிடம் காண்பித்த போதும், பருவச் சீட்டை வைத்திருக்கும் மாணவர்களைப் பேருந்திலிருந்து வெளியேறுமாறு நடத்துனர் தொடர்ந்து வலியுறுத்தியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாவலபிட்டியிலிருந்து கினிகத்தனை ஊடாக ஹட்டன் வரை செல்லும் அரசப் பேருந்தில், அதிகமாக தமிழ் மாணவர்களே இவ்வாறு புறக்கணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

‘இது அரசப் பேருந்து நடத்துனரின் சொந்த பேருந்து அல்ல. பாடசாலை மாணவர்களாகிய நாங்கள் பணம் செலுத்தி பருவச் சீட்டைப் பெற்றுள்ளோம். எங்களால் பேருந்தை விட்டு வெளியேற முடியாது’ என்று மாணவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த பேருந்து நடத்துனர், ‘ஆம், இது என்னுடைய பேருந்து; நீங்கள் அனைவரும் பேருந்தை விட்டு இறங்குங்கள்’ எனக் கூறும் காணொளி ஒன்று வௌியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, அந்தக் காணொளியை மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதோடு, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு இதுபோன்ற அநீதிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவது தொடர்பாக, ஹட்டன் டிப்போவின் முகாமையாளர் தொடர்புகொண்டு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பழனி திகாம்பரம் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இ.போ.ச பஸ் நடத்துனர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு முடியும்வரை அவர் சேவையில் உள்ளீர்க்கப்படமாட்டார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கொள்கையொன்றினை அரசாங்கம் வகுத்திருக்கும் சூழ்நிலையில் இப்படியானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *