நுவரெலியாவில் அடைமழை: போக்குவரத்து தடை

நுவரெலியாவில் இன்று (23) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் கந்தபளை கோர்ட்லோட்ஜ் சந்தியின் புதிய வீதி முழுவதுமாக நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டதுடன் தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
சுமார் ஒரு மணித்தியாலம் வரை பெய்த கடும் மழை காரணமாக வெள்ள நீர் பெருக்கெடுத்தாக குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர் .
குறிப்பாக நுவரெலியா கந்தபளை பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக விவசாயம் செய்யும் தாழ் நிலங்களில் தேங்கி நிற்கும் வெள்ள நீரினால் அறுவடைக்கு தயாரான மரக்கறிகளும் அழிவடைந்துள்ளது.
எனவே நுவரெலியா உடப்புசல்லாவை பிரதான வீதியினை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.