மலையகப்பகுதிகளில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மத்திய மலைநாட்டு பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை மற்றும் வீசும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (27) அதிகாலை ஹட்டன் செனன் பகுதியில் பிரதான வீதியில் பல மரங்கள் முறிந்து விழுந்ததால், ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பிரதான வீதியில் விழுந்த மரங்களை வெட்டுவதற்கு ஹட்டன் பொலிஸ் அதிகாரிகளும், பிரதேச மக்களும் இணைந்து வெட்டி அகற்றினர். எனினும், இந்த வீதியினூடான போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள டிக்கோயா பகுதியில் பல பெரிய மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழுந்துள்ளதோடு, வீதியோரங்களில் அமைந்துள்ள பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
ஹட்டன் வனராஜா தோட்டப்பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், மூன்று வீடுகளின் கூரைகள் மற்றும் சமையலறை சுவர்கள் என்பன சேதமடைந்துள்ளன.
தற்போது வீசும் பலத்த காற்று காரணமாக, மரங்கள் மற்றும் மரக்கிளைகள் உயர் மின்னழுத்த மின் கம்பிகளில் விழுந்துள்ளதன் விளைவாக ஹட்டன், நோர்வூட், கொட்டகலை மற்றும் நோட்டன்பிரிடஜ் ஆகிய பகுதிகளில் முழுமையான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மின் தடை ஏற்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹட்டன் மின்சார வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
க.கிஷாந்தன்