மலையக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்

சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகி இருந்தால் மலையக மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கும். எனவே, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஊடாக அவரின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று (01) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன இணைந்து நடத்திய மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது உண்மையை சொல்லியே சஜித் வாக்கு கேட்டார். பொய்களை கூறியே அநுர வாக்கு கேட்டார். இறுதியில் பொய்தான் வென்றது. எனினும், இன்னும் ஒரு வருடத்தில் இந்த அரசாங்கம் ஆட்டம் காணும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெற வைக்கவும். 6 ஆம் திகதி காலை வேளையிலேயே சென்று தொலைபேசி சின்னத்திற்கு வாக்களிக்கவும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சஜித் ஜனாதிபதியாக தெரிவாகி இருந்தால் மலையக மக்கள் வாழ்வில் மாற்றம் வந்திருக்கும். எதிர்க்கட்சியில் இருந்தபோது மலையக மக்கள் தொடர்பில் அநுர கூறிய விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.